என்னினமே என்சனமே! என்னை உனக்கு தெரிகிறதா?
செவ்வாய், ஆகஸ்ட் 7, 2007
"...சிவபதமளித்த செல்வமே சிவபெருமானே..." எனும் ஒருவாசகத்துக்கும் உருகாதார் கூட உருகிப்போகும் திருவாசகவரிகளை, உச்சரிப்புச் சுத்தமாய், ஊனுருகப் பாடும் அந்த மனிதனை, அவர் இசையின் கரைதலில் கசிந்து கண்ணீர் மல்கும் மனிதர்களை, வேடிக்கை பார்க்கும் என் பாலகப் பருவத்தில் அறிமுகமான அந்த அற்புதமான ஈழத்து இசைக்கலைஞன்தான் பொன். சுந்தரலிங்கம்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், பின்னாட்களில் யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தார். ஈழத்தின் பல இசைமேடைகளிலும், கோவில்களிலும் ஒலித்த அந்த வெண்கலக்குரலோன், இலங்கை வானொலி புகழ் இசைக்கலைஞராக அறியப்பட்டிருந்த போதும், மக்கள் கலைஞனாக பலரது மனங்களிலும் இடம்பிடித்துக்கொண்டதென்னவோ " இந்த மண் எங்களின் சொந்த மண்.." பாடலைப் பாடியதன்பின்தான். இந்தப்பாடல் பின்னர் மற்றுமொரு ஈழத்துப்பாடகர் சாந்தனாலும் பாடப்பெற்று இறுவட்டாக வந்தததென நினைக்கின்றேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கென ஒரு அடையாளத்தைத் தந்தது, " என்னினமே என் சனமே, என்னை உனக்குத் தெரிகிறதா? .." எனும் இப்பாடல்தான் என, ஒரு வானொலிச் செவ்விக்காக சந்திந்தபோது என்னிடம் கூறியிருந்தார். அந்தப்பாடலையும், இன்றைய ஈழச்சூழலைச் சுட்டும் பாடலையும், சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற, ஒரு வயலின் மிருதங்க அரங்கேற்ற நிகழ்வில் பாடிய காட்சிதனை (ஏற்கனவே வன்னியனின் ஈழத்துப்பாடல்கள் தளத்தில் ஒலி வடிவாகத் தந்திருந்தபோதும்) ஒளிப்பதிவாகப் பதிவ செய்கின்றேன்.
இது தமிழ்த்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியிலிருந்து பதிவு செய்யப்பட்டது. அரங்கேற்றம் செய்யும் செல்வன்கள் கூட புலம்பெயர் சூழலில் ஈழத்தின் இளைய தலைமுறையின் கலையார்வத்துக்கும், தமிழபற்றுக்குமான நல் எடுத்துகாட்டாகக் சொல்ல முடியும். இந்நிகழ்ச்சியோடு தொடர்புடைய அனைவர்க்கும் நன்றி கூறி, மற்றுமொரு ஈழத்துக் கலைஞனின் கலைத்துவத்தை மனநிறைவோடு பதிவு செய்கின்றேன்.
Posted byமலைநாடான் at காலை 6:24 6 comments
Labels: ஈழத்துக்கலைஞன். ஈழத்துப்பாடல்
இணையத்தில் இன்பத்தமிழ் 23
ஞாயிறு, ஆகஸ்ட் 5, 2007
வணக்கம் நண்பர்களே!
ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
இன்றைய நிகழ்ச்சி, இன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில், தமிழ்வலைப்பதிவு நண்பர்கள் இனைந்து நடாத்திய தமிழ்வலைப்பதிவர் பட்டறை ஏற்பாட்டாளர்களின் கருத்துக்கள் தாங்கிவரும் சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது.
இந்நிகழ்ச்சி குறித்து, பொன்ஸ், விக்கி, சிவகுமார், ஆகியோர் கருத்துக்கள் வழங்கியிருந்தார்கள். இப் பயிற்சிப்பட்டறை, இணையத்தமிழ்ப்பரப்பில் புதிய நல்ல பல ஆரம்பங்களுக்கு வழிசமைக்கும் என்ற நம்பிக்கையுடன், இந்த நிகழ்வினை ஒரு குடும்பமென இணைந்து, முன்னெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நிகழ்ச்சியைக் கேட்க :-
|
Posted byமலைநாடான் at மாலை 7:12 4 comments
Labels: ஒலிபரப்பு. வலைப்பதிவர் பட்டறை. சிறப்பு நிகழ்ச்சி
வலைப்பதிவர் பட்டறை சிறப்புற வாழ்த்துக்கள்!
இன்று தமிழகத் தலை நகர் சென்னையில், இந்தியாவில், தமிழ்மொழிசார்ந்து, முதன்முறையாக, பாரிய அளவில் திட்டமிட்டு, சென்னைப் பல்கலைக்ககழக வளாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும், வலைப்பதிவர் பட்டறை சிறப்புற ஈழ வலைப்பதிவு நண்பர்கள் சார்பிலும், இணையத்தில் இன்பத்தமிழ் வானொலி நிகழ்ச்சி சார்பிலும், ஐரோப்பியத் தமிழ் வனொலி சார்பிலும், இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதிலே ஆர்வமுடன் கலந்துகொள்ளும், புதிய நண்பர்களுக்கும், இப்பட்டறையை சிறப்புற ஒழுங்கமைந்திருக்கும் ஏற்பாட்டாள நண்பர்களுக்கும், கலந்துசிறப்பிக்கும் அனைத்து நண்பர்களுக்கும், அறிஞர் பெருமக்களுக்கும், பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.
இந்நிகழ்வின் ஆதாரமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி அனுசரணையாளர்கள் அனைவர்க்கும் நன்றிகளும், வாழ்த்துக்கள்.
Posted byமலைநாடான் at காலை 5:52 4 comments
Labels: வலைப்பதிவர் பட்டறை, வாழ்த்துக்கள்